யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நேற்று (20) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின்போது, பாடசாலை நிர்வாகத்தினால் இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் கடந்த வருடம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியின் போது, இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்புகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, பாடசாலை நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு பாடசாலை நிர்வாகம் பந்தல்களில் எந்தவித அலங்காரமும் செய்யக்கூடாது என தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாதாரண அலங்காரம் கூட செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் போது, அலங்காரம் செய்வதற்கு முயன்ற ஒரு பழைய மாணவர் மீது ஆசிரியர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான அந்த மாணவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் யமுனாவை தொடர்புகொண்டு விசாரணை நடத்திய போது, தனிப்பட்ட முறையில் எவரும் அலங்காரங்களுக்கு தடை விதிக்கவில்லை எனவும், தாக்குதல் சம்பவம் குறித்த எந்த தகவலும் இதுவரை அவர்களுக்கு தெரியவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பாடசாலை அதிபரை தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த ஆண்டு மாணவர்கள் வீட்டில் அலங்காரங்களை தயார் செய்து, பள்ளிக்கொண்டு வந்து அலங்கரித்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதற்கான விசாரணைகள் இன்னும் முடியவில்லை என்பதால் நிர்வாகம் பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு இல்லங்கள் திருப்திகரமான முறையில் அமைக்கப்பட்டதாகவும், இல்ல அலங்காரங்களுக்கு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், நிர்வாகத்தின்மீது குற்றம் சாட்டும் தரப்பினருக்கு தங்களது நிலைப்பாடு தெளிவாக விளக்கப்பட வேண்டும் எனவும், உண்மைத் தகவல்கள் இன்றி செய்தி வெளியிடப்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், அலங்காரங்கள் தொடர்பாக எந்தவொரு தரப்பினராலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்றும், அனுமதி இன்றி வந்த பழைய மாணவரை மட்டுமே நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாகவும், அவர்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல எனவும் அதிபர் தெரிவித்தார்.



