யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (20) வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றி செல்லுவதைத் தடுக்க வேண்டுமென்றும், இது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
முக்கியமாக, மருத்துவர்கள் இதனை அதிகமாக கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகவும், விபத்துகளில் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதே காரணமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இதில், பெற்றோர்கள் அதிகமான அளவில் கவனக்குறைவாக உள்ளனர் என்றும், இது மாணவர்களின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கச் செய்வதை தடுக்கும் வகையில், பொலிஸாருக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் முறையாக தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.
மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சட்டத்தினை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதற்காக, பொலிஸார் வீதிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவுள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு சார்ந்த சட்டங்களை மீறுவோர் எதிர்கொள்ளும் அபாயங்களை பொதுமக்கள் புரிந்துகொள்வதன் மூலம், இந்தக் கோரிக்கையை முழுமையாக கடைப்பிடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.




