சமூக செயற்பாட்டாளர் குருசுமுத்து விமலசேன லவக்குமார் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை 20.02.2025 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வாக்குமூலம் வழங்க தம்மை அழைக்கப்பட்டுள்ளதாக கு.வி.லவக்குமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதற்கான அழைப்பானது வாழைச்சேனை பொலிசார் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயம் வேண்டி அரசிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டம்,முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி வேண்டிய போராட்டங்கள் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருந்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் அவற்றில் இருந்து விலகி வாழ்ந்து வந்தார். இவ்வாறான சூழ் நிலையில் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-க.ருத்திரன்-



