நேற்றையதினம் (16)முல்லைத்தீவுக்கு வருகைதந்த பிரதமருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் தருவதாக தெரிவித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மக்கள் சந்திப்புக்காக நேற்று (16) விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரினி அமர சூரியவுடன் கலந்துரையாடுவதற்கும், தமது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு காணிகளை விடுவித்துத்தருமாறு கலந்துரையாட இருந்ததாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி கேப்பாப்புலவு பூர்வீக மக்களுக்கு கடற்றொழில்நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஊடாக நேரம் ஒதுக்கி தருவதாக உத்தரவாதம் வழங்கப்பட்ட்டு பிரதமரின் நிகழ்வு வருகைதருமாறு தொலைபேசிமூலம் அமைச்சரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக சந்திப்புக்கு அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்கள் அதற்கமைவாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு மணிக்கு வருகை தருமாறும் பிரதமர் அவர்களோடு கலந்துரையாடுவதற்கு நேரம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் நிகழ்வுக்கு வருகைதந்து மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போதிலும் தமது காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஒருவார்த்தை கூட வாய்திறக்கவில்லை என இராணுவத்தின் பிடியில் உள்ள கேப்பாபுலவு காணி உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கடந்த தேர்தலில்களில் தமது வீடு வாசற்படிகளில் ஏறி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த முல்லைத்தீவை சேர்ந்த NPP அரசின் மாவட்ட அமைப்பாளரோ அல்லது NPP பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது காணி விடயம் தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசாது அபிவிருத்தி தொடர்பில் உரையாற்றிவிட்டு தம்மை ஏமாற்றியதாகவும் கேப்பாபுலவு மக்கள் ஊடக சந்திப்பின் வாயிலாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரதமருக்கு முன்பாக தாம் அமர்ந்திருந்த போதிலும் பிரதமரிடம் காணி தொடர்பில் கேள்வி எழுப்பி காணி விடுவிப்பு தொடர்பில் கோரிக்கை வைக்க எழுந்து கதைக்க முற்பட்ட போது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளால் பிரதமர் முன்பாகவே தான் தடுக்கப்பட்டதாக இராணுவ பிடியில் உள்ள கேப்பாபுலவு காணி உரிமையாளர்களில் ஒருவரான விவேகானந்தன் இந்திராதேவி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தாம் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் புதுக்குடியிருப்புக்கு வருகை தந்த பிரதமரிடம் தனது காணி விடுவிப்பு தொடர்பில் மனுக்களை கையளித்ததாகவும் இது தொடர்பில் நேரடியாக கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் வருகை தந்த போதும் கலந்துரையாடலில் தமக்கு நேரம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.