மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை கிராம மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்த கோரிக்கைக்கு பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு வீதி புனரமைப்பு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இந்த சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என, கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இறுதியாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நேற்றைய தினம் ( 15.02.2025 – சனிக்கிழமை) இந்த சேவையை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
இந்த சேவை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில், மண்முனைப்பற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் முக்கிய விவாதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆரையம்பதி, காங்கேயனோடை, ஒல்லிக்குளம் உள்ளிட்ட கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பஸ் சேவை ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு பேருந்து போக்குவரத்து நிலைய முகாமையாளர் ஸ்ரீதரன், பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, காங்கேயனோடை கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் பஸ் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டது.
இன்று முதல், அம்பலாந்துறை – மண்முனை பாலம் வழியாக, ஒல்லிக்குளம், காங்கேயனோடை, ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சென்றடையும் இந்த பஸ் சேவை, பொதுமக்களின் மிகப் பெரிய தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.




