சவூதி அரேபிய அரசு, 2025ம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை விதிமுறைகளை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், இனி ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் குழந்தைகள் வருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதுமிருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த பெரும் திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்கள், மருத்துவ அவசர நிலைகள் மற்றும் மனித நெரிசலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியாத சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய முடிவை சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒதுக்கப்படும் ஹஜ் அனுமதி முதல் முறையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம், இதுவரை ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்குமெனவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
புதிய விதிமுறைகள் தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




