பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 போக்குவரத்து வழியில், போக்குவரத்து சேவைகள் முன் அறிவிப்பு இல்லாமல் 3 மணித்தியாலங்களாக நிறுத்தப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (10) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் எது வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து சேவை தடைப்பட்டிருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் 750 இலக்க பேரூந்து சேவைகள் முன்னறிவித்தலின்றி தடைப்பட்டிருந்தமையால் தங்களின் முக்கியமான பயணங்களை தவற விட்டுள்ளனர். குறிப்பாக, பருவகால சீட்டை பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள், தமது வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அச்சுவேலி பகுதிகளில் இருந்து பயணம் செய்யும் மக்கள், என பலர் பாதிக்கப்பட்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை சாலை அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பேரூந்து பழுதுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரை மணித்தியாலங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவை இடம்பெறுகின்ற போதிலும் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு 6 பேருந்து சேவைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் ஆனால் அதில் ஒரு சேவை கூட இடம்பெறவில்லை எனவும் பயணிகள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
இவ்வாறு போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமம் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தில் தடை ஏற்படுவதை சரிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.




