களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் பிரபல பாடசாலைக்கு அருகில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (07) இரவு, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
34 வயதான இச்சந்தேக நபர், சம்மாந்துறை பகுதி புளக், ஜே கிழக்கு 03 பிரிவு பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசமிருந்து 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்தேகநபர் மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பை, களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.ஏ. தில்சான் தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.