நாட்டின் பல பகுதிகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி மோசடிகள் இடம்பெற்று வருகின்றன என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தற்பொழுது செயற்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்து, நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி ஒன்று நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கையில், E-8 வேலைப் பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்கும் எந்தவொரு தனியார் நிறுவனம், தனிநபர் அல்லது குழுவுக்கும் இதுவரை எந்தவொரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால், எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது குழுக்கள் சட்டப்பூர்வமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மோசடி செய்தி பரவுவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதாகக் கூறி பணம் வசூலிக்கும் நபர்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




