பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக ஒரு மாணவன் இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் (07) வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கு பாடசாலை வளாகத்திலேயே இளைஞர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தர மாணவனுக்கும், அதே பாடசாலையில் கல்வி கற்கும் கீழ் வகுப்பு மாணவனுக்கும் இடையில் கடந்த சில தினங்களாக முரண்பாடு இருந்து வந்துள்ளதாகவும், இம் முரண்பாடு தொடர்ந்த நிலையில், கீழ் வகுப்பு மாணவன் வெளி இளைஞர்களை அழைத்துச் சென்று, பாடசாலை வளாகத்திலேயே உயர்தர மாணவனை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதலின் விளைவால், உயர்தர மாணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



