எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15ம் திக்திகளில் நடைபெறவுள்ள கச்சதீவு பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் நேற்று (07) யாழ். மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கச்சதீவு பிரதேசம் வழிபாட்டிற்கு ஏற்றவகையில் கடற்படையால் தயார் செய்யப்படுவதாகவும், இதற்காக பிரதேச சபை உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். யாத்திரிகர்களுக்கான குடிநீர் விநியோகம், மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் விரிவாக பரிசீலிக்கப்பட்டன.
இந்த ஆண்டு, இலங்கையிலிருந்து 4,000 மற்றும் இந்தியாவிலிருந்து 4,000 என மொத்தம் 8,000 யாத்திரிகர்கள் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 9,000 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். யாத்திரிகர்களுக்கான உணவு வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு, மார்ச் 14ம் திகதி இரவு உணவு மற்றும் 15ம் திகதி காலை உணவு வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
போக்குவரத்து வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மார்ச் 14ம் திகதி காலை 4.00 மணி முதல் 11.30 மணி வரை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் புறப்படும். போக்குவரத்து கட்டணமாக, நெடுந்தீவிலிருந்து கச்சதீவு செல்ல ரூ.1,000, குறிக்கட்டுவானில் இருந்து ரூ.1,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படகு சேவையில் ஈடுபடும் உரிமையாளர்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்றவாறு கடற்படையிடம் தேவையான சான்றிதழ்களை பெற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்துரையாடலில் பங்கேற்று தேவையான ஆலோசனைகள் வழங்கினார். கடந்த வருடத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை தவிர்க்க தேவையான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவிலிருந்து வருகை தரும் யாத்திரிகர்கள் சரியான நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள சுங்கத்திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட கலந்துரையாடலின் மூலம் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படையின் பிரதி தளபதி, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.