கடந்த மூன்று நாட்களாக யாழ். மாநகர சபையால் வழங்கப்படும் குடி நீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால், நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நீர் பயன்பாட்டாளர்கள் மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்காமல், தொடர்ந்தும் மக்களுக்கு அதே நீர் விநியோகிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அருந்துவதற்கும், சலவை மற்றும் சமையலுக்கும் கூட இந்த நீர் பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர ஆணையாளர் விளக்கம் அளிக்கையில், நீர் வழங்கல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாட்டை சரிசெய்வதற்காக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
பாதாள சாக்கடையில் செம்மண் அதிகமாக குவிந்ததால் இந்த நிலை உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், தொடர்ந்து மூன்று நாட்களாக யாழ்ப்பாண மக்கள் தாகம் தீர்க்க குடிநீரின்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.




