மாவையின் வரலாறு இளைஞர்களுக்கு அரசியல் பாடமாக அமையும்!

Date:

மாவை சேனாதிராசாவின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்-

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சுவரை, தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும், நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு அறிவோம்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தீவிரம் பெற்ற, எம் இனத்திற்கு எதிரான திட்டமிடப்பட்ட இன ஒடுக்கல் நடவடிக்கைகள் காரணமாக அன்றைய தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த போது மிகத் தீவிரமாக செயற்பட்டவர்களில் மாவை அண்ணரும் ஒருவராவார்.

தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களுடனும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த பிரபாகரன் அவர்களுடனும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்ததோடு நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் உதவிகளையும் செய்திருந்ததோடு, அவர்கள் பிரிந்த பின்பும் இருவருடனும் தனித்தனியாகவும் தொடர்புகளை வைத்திருந்தார்.

அதேநேரத்தில், தந்தை செல்வா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அரசியல் போராட்டங்களிலும் தந்தை செல்வா அவர்களுக்கும் அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் மிகவும் நம்பிக்கைக்குரியவாராக தொண்டனாக தொடர்ச்சியாக பங்குபற்றியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பத்துத் தடவைகளுக்கு மேற் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக அரச படைகளின் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்திருந்தார். இன்று அவர் சந்திக்கும் வலிதான உடல் உபாதைகளுக்கு அன்று அவர் அனுபவித்த சித்திரவதைகளும் ஒரு காரணமாகும்.

தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி, இளைஞர் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றில் பல பொறுப்பான பதவிகளை பெற்றுக்கொண்ட மாவை அண்ணர் அவர்கள், அவற்றின் ஊடாக தனது கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் தன்னாலியன்றவரை கடமைகளை செய்திருந்தார்.

1970 ம் ஆண்டு முதல் மிக நெருக்கமாக, தொடர்ச்சியாக அவருடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ் மக்களுக்கான அரசியலைப் பேசுவதே நெருக்கடியானது எனக் கருதப்பட்ட காலங்களில், நான் சாரதியாகவும், அவர் கட்சித் தொண்டராகவும் செயற்பட்டு விடுதலைப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்த சந்தர்ப்பங்களை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரு சாதாரண கட்சித் தொண்டராக இருந்த காலத்தில்கூட தன்னுடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பை உணர்ந்து கொண்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னரும் கூட, அதன் செயற்பாடுகளில் தீவிரமாக இருந்த வேளையிலும், தமிழரசுக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் மாவை அண்ணர் அவர்கள். தமிழரசுக் கட்சியின் மையமாக செயற்பட்டிருந்த தலைவர்கள் வரிசையின் முடிவாக மாவை அண்ணரின் மறைவு அமைந்து விடுமோ என்பது இன்று தமிழ்த் தேசியவாதிகள் பலரினதும் கவலையாக உள்ளது.

ஒரு கட்சியின் தொண்டனாக, பிரதான செயற்பாட்டாளராக, தலைவனாக, தமிழர் தாயகத்தில் அவரது கால் படாத கிராமங்கள் இல்லையெனலாம். ஆரம்ப காலங்களில் எனது தந்தையின் செயலாளருக்குரிய அரச பேரூந்து பயணச் சீட்டினைப் பயன்படுத்தி எப்போதும் தாயகமெங்கும் களப் பயணங்களை அவர் மேற்கொள்வதை நான் கண்டிருக்கிறேன். தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதிலும், தனது கட்சியையும் வளர்த்தெடுப்பதிலும் அவரது அயராத உழைப்பையும் உணர்ந்திருக்கிறேன்.

தனது இறுதிகாலத்தில், இயற்கையான மூப்பு, உடல் உபாதைகள் அனைத்துக்கும் மத்தியிலும் தனது கட்சியின் ஒற்றுமைக்காகவும் கட்சியின் தடம் மாறாத செயற்பாடுகளுக்காகவும் கடுமையாக போராடியதை கண்டோம். அதற்காக கடுமையான விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும் அவர் முகம்கொடுத்ததையும், அதன் காரணமாக மனதாலும் உடலாலும் அவர் தளர்ந்திருந்ததையும் கண்டோம்.
வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த சாதரண இளைஞர் ஒருவர், ஒரு இனத்தின் தலைவன் எனும் இடத்தை அடையும் வரையிலான அவரது விடுதலை நோக்கிய பயணம், தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கின்ற, அவர்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை கொடுக்க தயாராகின்ற அனைத்து இளைஞர்களுக்குமான அரசியல் பாடமாக அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

மாவை அண்ணர் அவர்களை இழந்து துயருறும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவருடனும் எமது துயரங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்