தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்தை தாங்கிய ஊர்தி பவனிக்கு எதிரான தாக்குதலுக்குப் பின் 16 மாதங்கள் கழித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நடராஜர் காண்டீபன் அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
நேற்று (25) அவர் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போது இது தொடர்பாக நடராஜர் காண்டீபன் அவர்கள் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில், “2025 ஜனவரி 21ம் திகதி, ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக காண்டீபன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த திகதியில் குறித்த நேரத்தில் சமூகமளிக்க முடியாததற்கான காரணத்தை தெரியப்படுத்தி, 2025 ஜனவரி 23ம் திகதிக்கு விசாரணையை மாற்றித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் அந்த கோரிக்கைக்கு ஏற்ப, 24ம் திகதி காலை 9.00 மணிக்கு குறித்த விசாரணைக்கு மீளவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விசாரணைக்கு சமூகமளித்திருந்தார்.
உப பொலிஸ் பரிசோதகர் டில்ரங்கா தலைமையிலான விசாரணையில், தனது வாக்குமூலத்தை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிஷாந்தினி தமிழில் பதிவு செய்தார் என நடராஜர் காண்டீபன் தெரிவித்திருந்தார்.
மேலும், இதன்போது, கடந்த 2023 செப்டம்பர் 17ம் திகதி திருகோணமலை சர்தாபுரத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் திருவுருவப் பட ஊர்தி பவனிக்கு காடையர்கள் நடத்திய தாக்குதலின் விவகாரம் தொடர்பான விசாரணை இப்போதும் தொடர்வது குறித்து ஆட்சேபனை தெரிவித்திருந்ததாகவும், 16 மாதங்கள் கழித்து இச்சம்பவம் மீளப் பார்க்கப்படுவது ஏன் என்பதை தனது வாதங்களில் முன்வைத்ததாகவும் நடராஜர் காண்டீபன் தெரிவித்தார்.
நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு தனது பதிலை வழங்கியிருந்ததுடன் தியாக தீபம் திலீபனின் அரசியலை முன்னெடுக்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்திருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும், திலீபனும் காவி நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன்.இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன்.” என்பதை நான் பதிவு செய்தேன்.எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவி்த்தார்.
தியாகதீபம் திலீபனின் ஊர்தி பவனி தாக்குதலுக்ககுள்ளாகி 16 மாதங்கள் கழிந்த நிலையில் மீளவும், குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




