தந்தையும் இளைய மகனும் இணைந்து மூத்த மகனை தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பூண்டுலோயா, டன்சினன் வத்தையைச் சேர்ந்த சிங்கன் நடேசன் நவின் குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி மதியம் தந்தையும் மூத்த மகனும் அதிகளவில் மது அருந்தியுள்ளதாகவும், தந்தை வீட்டிற்கு வந்த போது மூத்த மகன் அதிக சத்தத்தில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது, மகனிடம் சத்தத்தை குறைக்குமாறு தந்தை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வாக்குவாதத்தில் உயிரிழந்த மகன் தந்தையை தாக்கியமை தெரியவந்துள்ளது.
தந்தை தரையில் விழுந்த போது கொல்லப்பட்ட மூத்த மகன் பெரிய கல்லை எடுத்து தந்தையின் தலையில் வீசியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூத்த சகோதரன் தந்தையைத் தாக்குவதை சகிக்க முடியாத இளைய சகோதரன், ஒரு கட்டையை எடுத்து அண்ணனை அடிக்க, அப்போது எழுந்து நின்ற தந்தையும் தடியை எடுத்து அடித்தார்.
மூத்த மகன் வீட்டின் முன் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தந்தையும், 18 வயதான இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கப்பட்டதன் காரணமாக இருவரும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



