ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியற் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசு கட்சி பல குழுக்களாக பிரிந்துள்ள நிலையில், சிறிதரன் தனது ஆதரவாளர்களுக்காகவும் குரல் கொடுக்காமல், தனக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடத்தை உறுதி செய்ததாக பலத்த எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில், இந்த கதையை கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நேற்றையதினம் கிளிநொச்சி – செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டுமானால், தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத்தேவை எழுந்துள்ளது.
உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக்கடமை எமக்கு தரப்பட்டுள்ளதை உணர்ந்து, கொள்கைரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத்தமிழர்களின் அரசியல்வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும் உழைப்பேன் – என்றார்.




