எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
கடந்த வருட பொருளாதார நிலைமைகள் காரணமாக நாடு பல்வேறு பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததாகவும், வங்குரோத்து நிலைக்கு ஆளானதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடும் பொருளாதாரமும் ஸ்திரமாக இருக்கும் போது அதன் பலன்கள் மக்களுக்கே கிடைக்கும் என்பதால் அதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஒரு நாடு என்ற வகையில் தியாகங்கள் மற்றும் கிடைத்த வெற்றிகள் குறித்து மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என தான் நம்பியதாகவும், அதை இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் பெரும் முயற்சியுடன் கட்டமைக்கப்பட்ட கொள்கை ரீதியான அரசியல் பாதையை மக்கள் நிராகரித்தமை காரணமாக தான் விரக்தியடைந்துள்ளதாகவும், அதன்காரணமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஷெஹான் சேமசிங்க 2020 பாராளுமன்ற தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இதன்போது அவர் 119,878 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




