உறவை முறித்துக் கொண்ட தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, அச்சுறுத்தியதாக கூறப்படும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.
பருத்தோட்ட, பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் கடற்படை சிப்பாய் சுரேஷ் லக்மால் விக்ரமசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் இசுரு குணதிலக்க நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான முறைப்பாட்டாளர் நீண்ட காலமாக சந்தேகநபருடன் காதல் உறவில் இருந்து வந்ததாகவும், காதல் உறவிலிருந்து விலக முறைப்பாட்டாளர் தீர்மானித்த நிலையில், சந்தேகநபர் யுவதியின் நிர்வாண புகைப்படங்களை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளனர்.
இதன்படி, இந்த சந்தேகநபர் கணினி சட்டம் மற்றும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் சந்தேகநபர் கடற்படையில் சேவையாற்றுவது தொடர்பில் தலைமையகத்தில் இருந்து அறிக்கைகள் வரவழைக்கப்பட வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் சமர்பித்தது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்து, சந்தேக நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




