இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று (20) கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு, சம்பிரதாயபூர்வமான சந்திப்பாகவே அமைந்திருந்தது.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 5 மணி தொடக்கம் 5.30 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இரா.சம்பந்தன் கலந்து கொள்ள முடியாததால், கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி சாணக்கியனை அழைத்து வருவதாக எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கையையடுத்து, சாணக்கியனை கூட்டத்துக்கு அழைத்து வர இந்திய தூதரகம் அனுமதியளித்தது.
இந்த சந்திப்பில், கலந்து கொண்ட தமிழ் தரப்பினர அனைவரும், மீண்டும் பதவியேற்ய ஜெய்சங்கருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்க கோரிக்கை விடுத்தனர். செல்வராசா கஜேந்திரன் தவிர்ந்த அனைவரும், 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரினர்.
செ.கஜேந்திரன், தமது கட்சி 13வது திருத்தத்தை எதிர்ப்பதாக குறிப்பிட்டதுடன், தமது கட்சியின் நிலைப்பாடு அடங்கிய ஆவணமொன்றையும் வழங்கினார்.
தாங்கள் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக சி.சிறிதரனும், க.வி.விக்னேஸ்வரனும் குறிப்பிட்டனர். சிறிதரன் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக குறிப்பிட்ட உடனே, பொதுவேட்பாளரை எதிர்ப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சி.சிறிதரன் குறிப்பிட்டபோது, அதை அவ்வளவாக கண்டுகொள்ளாத ஜெய்சங்கர், க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்ட போது, “பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் ஆர்வமாக இருக்கிறீர்களா?“ என கேட்டபோது, க.வி.விக்னேஸ்வரன் சுருதியை மாற்றி, குடிமைச்சமூகமே இந்த விவகாரத்தில் செயற்பட்டு வருவதாகவும், அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும், தாம் அதை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அனைவரும் கருத்து தெரிவித்த பின்னர், ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தாம் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேசி வருவதாகவும், தொடர்ந்தும் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.




