எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறுவது, நாட்டை பிரிவினைவாதத்திற்குப் பலியாக்கும் என தேசிய சுதந்திர முன்னணி நேற்று தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி நாட்டை பிரிவினைவாதத்திற்கு பலிகடா ஆக்க வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என எதிர்கட்சித் தலைவர் உறுதியான மற்றும் வெளிப்படையான அறிக்கையை வடமாகாண மக்களுக்கு விடுத்துள்ளார். இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்ததால் முன்னைய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது மிகத் தெளிவாகிறது.
எவ்வாறாயினும் இலங்கையின் தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக இம்முறை அந்த எதிர்ப்பு வலுவாக வெளிப்படவில்லை.
எனினும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவர் இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுகின்றார் என்பது மிகத்தெளிவாகும்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை அவர் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்த போது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இரண்டு சரத்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக அந்த திருத்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததை நாம் நினைவுகூருகின்றோம்.
முன்னதாக 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு அவரது தந்தை தனது மறுப்பைத் தெரிவித்தாலும், பின்னர் 13வது திருத்தத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தியதையும் நினைவில் கொள்கிறோம். ஆனால் எந்த நேரத்திலும் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் அறிவிக்கவில்லை.
“அவர் ஒரு ஜனாதிபதியாக கூட அதைச் செய்ய முயற்சிக்கவில்லை. குறுகிய அரசியல் நலன்களுக்காக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன், குறிப்பாக அவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் 13 வது திருத்தத்தின் வரலாற்றை ஆராயுமாறு எதிர்க்கட்சித் தலைவரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.




