ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்று பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக விடுவிக்கப்பட்டு கட்டட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய நல்லாட்சி அரசினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடசாலை பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கேட்போர் கூட கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்திருந்தார்.
நாட்டின் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக குறித்த வேலை திட்டம் இடைநடுவில் ஸ்தம்பித்திருந்தது.
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் மருத்துவபீடத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிவகித்த நல்லாட்சிக்காலத்தில்தான் யாழ்ப்பாண அபிவிருத்திக்கு வரலாற்றிலேயே அதிக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், எனக்கு ஒரு மனக்குறையுள்ளது. அப்போது, எனது பாடசாலையன சுன்னாகம் ஸ்கந்தவரேதயாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக வந்தடையவில்லை. ரணில் விக்கிரமசிங்க அடிக்கல் நாட்டிய வேலைத்திட்டம் பாதியில் நிற்கிறது. அதை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்“ என கேட்டிருந்தார்.
அவர் உரையாற்றிவிட்டு கதிரையில் அமர்ந்த போது, உடனடியாக அந்த திட்டத்தை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், 110 மில்லியன் ரூபா நிதியினை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்துக்காக ஒதுக்குமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதோடு மிகுதி 40 மில்லியன் எதிர்வரும் வாரமளவில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதமசெயலருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.




