கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தனம் பகுதியில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌதம் (25) என்பவர் பிரியா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கௌதம் திடீரென நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.
ரவுடியான கௌதம் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது ஏற்கனவே கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகளைக் கொண்ட கௌதம் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கௌதம் அடிக்கடி ராஜ்கிரண் வீட்டிற்குச் சென்றுள்ளார். இருவரும் வீட்டிலேயே மணிக்கணக்கில் பேசிக் கொண்டும் இருப்பார்களாம்.
அப்போது ராஜ்கிரணின் மனைவி பிரியாவை கௌதமுக்கு பிடித்துப் போனதாம். இருவரும் பேசிக்கொள்ளவே அது விரைவில் காதலாக மாறி இருக்கிறது. நண்பனுக்குத் துரோகம் செய்து விட்டு அவரது மனைவியுடன் பழக ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரியா தனது கணவர் ராஜ்கிரணை விட்டுவிட்டு குழந்தைகளைக் கூட்டிச் சென்று கௌதமுடன் வாழ ஆரம்பித்துள்ளார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் சைதாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் ராஜ்கிரண் அடிக்கடி அங்குச் சென்று பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜ்கிரணை கொலை செய்ய கௌதம் முடிவு செய்தாக கூறப்படுகிறது.
அதன்படி சில மாதங்களுக்கு முன்பு அவரை கௌதம் வெட்டியுள்ளார். இருப்பினும், ராஜ்கிரண் பிழைத்துக் கொண்டார். இது தொடர்பான வழக்கில் கௌதம் கைது செய்யப்பட்டு திறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் ஜாமீனில் கௌதம் வெளியே வந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட உடன் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் கௌதமை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த மே 15ஆம் தேதி நள்ளிரவில் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு ராஜ்கிரண் அங்குச் சென்றுள்ளார். அந்த கும்பல் கௌதமின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் கதவைத் திறக்கவில்லை. சாவி துவாரம் வழியாக வெளியே யார் என்பதைப் பார்த்துள்ளனர். அப்போது தான் பிரியாவின் கணவர் ராஜ்கிரண் வேறு சிலருடன் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்தது தெரிய வந்தது.
இதனால் அச்சமடைந்த பிரியா மற்றும் கௌதம் கதவைத் திறக்காமல் வீட்டுக்குள்ளே இருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளார்.
வீட்டில் புகுந்த உடன் ராஜ்கிரணும் அவருடன் வந்தவர்களும் கௌதமை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதைப் பார்த்துப் பதறிய பிரியா அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். இதனால், அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் வீட்டை விட்டு தப்பியோடி விட்டார்.
அதேநேரம் ராஜ்கிரணும் அவருடன் வந்தவர்களும் கௌதமை குறிவைத்து வெட்டி சாய்த்துள்ளனர். இதனால் கௌதம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்ட போலீசார், ராஜ்கிரண் குழு பயணித்த ஆட்டோவை மடக்கிப் பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததால் ராஜா (28), பிரதீப் (26), தி.நகரைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோரை கைது செய்தனர். ராஜ்கிரண் உள்பட சிலர் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவர்களையும் போலீசார் இப்போது தேடி வருகிறார்கள்.



