துறவறத்தை மேற்கொள்வதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளை தானம் செய்துள்ளனர் குஜராத் தம்பதியினர்.
ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர்.
ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும். அதில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
எனவே, இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.