திருடன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கோப் குழுவின் புதிய தலைவர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 14ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும், தற்போதைய COP குழுவின் தலைவரான நான் ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது என் மீது எந்த நீதிமன்றத்திலும் வழக்கும், குற்றச்சாட்டும் இல்லை. இந்த அறிக்கை தொடர்பில் விஜித ஹேரத்திற்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனதா விமுக்தி பெரமுன பொறாமை காரணமாக தொடர்ந்து இந்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
கோப் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு சொந்தமானது என்ற அவர்களின் வாதம் தவறானது. வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்த பதவியை வகித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ரோஹித அபேகுணவர்தன தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சியடைவேன் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
திருடனை திருடன் என்று அழைக்க நாங்கள் அஞ்சமாட்டோம் என்றார். நான் திருடன் என்று கூறியதாக ரோஹித அபேகுணவர்தன நீதிமன்றத்திற்கு செல்வது மிகவும் நல்லது. அப்போது எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னோம் என்பதை நீதிமன்றத்தில் சொல்ல முடியும். இது ஒரு நல்ல சூழ்நிலை என்றும் அவர் கூறினார்.




