தந்தையின் துன்புறுத்தல் காரணமாக இரண்டு பாடசாலை மாணவிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை தோட்டத்தில் வசிக்கும் 16 மற்றும் 14 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளின் தாயார் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், பாடசாலை மாணவிகள் இருவரும் அவர்களின் பாட்டியின் பராமரிப்பில் உள்ளதாகவும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். .
தந்தை தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து பாட்டியையும், இருவரையும் திட்டி தாக்குவதாகவும், அந்த நிலை காரணமாக வீட்டில் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும் பாடசாலை மாணவிகள் இருவரும் திம்புல பத்தனை பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தந்தையினால் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் திம்புல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தோட்டத்திற்கு சென்று பாட்டியுடன் இரு மாணவர்களையும் (08) பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இரு மாணவிகளையும் டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறப்பட்ட பின்னர் இரு மாணவிகளையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.