லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த பகுதியைச் சேர்ந்த பழனிவேல் செல்வகுமாரி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பேருந்தில் பயணித்த பயணிகள் ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




