பதுளை பொது வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணராக கடமையாற்றிய வைத்தியரை கடத்திச் சென்ற இரசாயனவியல் பாட ஆசிரியர் ஒருவரை ஹிக்கடுவ பொலிஸார் புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
எனினும் கடத்தப்பட்ட வைத்தியர் (40) தொழிலை கைவிட்டு உயர்தர மாணவர்களுக்கான உயிரியல் பாட ஆசிரியராக கடமையாற்றி வந்தார். கைதான இரசாயனவியல் கற்பிக்கும் சந்தேகநபர் 28 வயதுடையவர்.
பெப்ரவரி 5 ஆம் திகதி தொடங்கொடவில் கடத்தல் இடம்பெற்றதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (7) பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஹிக்கடுவ பொலிஸார் தெல்வத்த மலவென்னவில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து உயிரியல் ஆசிரியரை மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட உயிரியல் ஆசிரியர் பதுளையை வசிப்பிடமாகக் கொண்டவர். பதுளை பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த இவர், கொவிட் தொற்று பரவிய காலத்தில் தனது மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு ஜப்பானுக்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு வருட காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கை திரும்பிய அவர் மருத்துவராக தனது தொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு பதிலாக காலியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் உயர்தர உயிரியல் ஆசிரியராக சேர்ந்துள்ளார். அந்த தனியார் கல்வி நிறுவனத்தின் கிளைகள் பல பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதைத் தவிர, அவர் காலியில் உள்ள பிரபல பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் உயர்தர மாணவர்களுக்கு உயிரியல் பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முன்னாள் வைத்தியரை கடத்தியதாக கூறப்படும் இரசாயனவியல் ஆசிரியர் காலியில் அமைந்துள்ள நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரசாயனவியல் ஆசிரியரை வேலைக்காக அவுஸ்திரேலியா அனுபபுவதாக கூறி, உயிரியல் ஆசிரியர் ரூ.4 மில்லியன் பணத்தை பெற்றுள்ளார்.
மிகக்குறுகிய காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாக பணம் பெற்றுக் கொண்டாலும் அவுஸ்திரேலியா பயணம் நாளுக்கு நாள் தாமதமாகி வருவதால் இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலைமையின் அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இரசாயனவியல் ஆசிரியரிடம் நான்கு மில்லியன் ரூபா பணம் பெற்றதாக சமாதான நீதவான் முன்னிலையில் கையொப்பமிட்ட கடிதமொன்றை இரசாயனவியல் ஆசிரியரிடம் உயிரியல் ஆசிரியர் வழங்கியுள்ளார்.
கடிதம் கொடுத்தும் பணத்தைத் திரும்பக் கொடுக்க தாமதமானதால், கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி உயிரியல் ஆசிரியரை இரசாயனவியல் ஆசிரியர் காரில் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரியல் ஆசிரியர் தான் பணிபுரியும் தனியார் கல்வி நிறுவனத்தின் தொடங்கொட கிளையில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றிற்கு விரிவுரை ஆற்றிவிட்டு, அவர் தங்கும் இடத்திற்குத் திரும்புவதற்காக பேருந்துக்காக காத்திருந்த போதே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



