ரஷ்யாவின் Il-76 போக்குவரத்து விமானம் ஒன்று ரஷ்யாவின் பெல்கோரோட் ஒப்லாஸ்ட்டில் ஜனவரி 24 அன்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் S-300 ஏவுகணைகளை சுமந்து சென்றதாக உக்ரைன் இராணுவ ஆதாரங்களை மேற்கோளிட்டு, உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்தன. அந்த விமானத்தை உக்ரைன் இராணுவமே சுட்டு விழுத்தியதாக உக்ரைன் தரப்பு தெரிவித்தது.
எவ்வாறாயினும், அந்த விமானத்தில் போர்க்கைதிகளான 65 உக்ரைனிய இராணுவத்தினரே இருந்தனர், கைதிகள் பரிமாற்றத்துக்காக அவர்கள் அழைத்து வரப்பட்டனர் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தாமே விமானத்தை சுட்டு விழுத்தியதாக வெளியான செய்திகளை உக்ரைன் இராணுவம் நீக்கியுள்ளது.
இன்று முன்னதாக, உள்ளூர் டெலிகிராம் சேனல்களில் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தோன்றும் வீடியோக்கள் வெளிவந்தன.
“கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு விசாரணைக் குழு மற்றும் அவசர சூழ்நிலைகள் அமைச்சக ஊழியர்கள் தற்போது சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்,” என்று பெல்கோரோட் ஒப்லாஸ்ட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தனது டெலிகிராம் சேனலில் கூறினார்.
Ilyushin Il-76 என்பது ஒரு கனரக போக்குவரத்து விமானம் ஆகும், இது இராணுவ சரக்கு மற்றும் துருப்புக்களை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டது. பின்புற கோபுரத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் அதிகபட்சமாக 80 மெட்ரிக் டன் எடையை சுமந்து செல்லும்.
Il-76 இன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஏற்றுதல் சாதனங்கள் அல்லது செப்பனிடப்படாத ஓடுபாதைகள் இல்லாத விமான நிலையங்களில் இருந்து இயக்க முடியும், எனவே இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பெலாரஷ்ய ஹஜுன் என்ற கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, பெலாரஸுக்கு S-300 ஏவுகணைகளை வழங்க ரஷ்யா Il-76 விமானத்தைப் பயன்படுத்தியுள்ளது. Il-76 ஆனது ஒரே தடவையில் 100க்கும் மேற்பட்ட பராட்ரூப்பர்களை ஏற்றிச் செல்ல முடியும்.




