சர்வதேச அளவில் எந்த நாட்டின் இராணுவம் பலமாக இருக்கிறது.. எந்த இராணுவம் பலவீனமாக இருக்கிறது என்பது குறித்த பட்டியலை குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாதுகாப்புத் தகவல்களைக் கண்காணிக்கும் இணையதளமான குளோபல் ஃபயர்பவர் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பலமான இராணுவத்தை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
அதன்படி இந்தாண்டிற்கான பட்டியலை குளோபல் ஃபயர்பவர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த பட்டியலின்படி, சர்வதேச அளவில் அதிக சக்திவாய்ந்த இராணுவமாக அமெரிக்கா இருக்கிறது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் சீனா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. தென்கொரியா ஐந்தாம் இடத்திலும், இங்கிலாந்து ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும், துருக்கி எட்டாவது இடத்திலும், பாகிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும், இத்தாலி பத்தாவது இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலில் இலங்கை 75வது இடத்தில் உள்ளது. சூடான் 76வது இடத்தில் உள்ளது.
வீரர்கள் எண்ணிக்கை, இராணுவ உபகரணங்கள், நிதி, புவியியல் இருப்பிடம் மற்றும் வளங்கள் என மொத்தம் 60க்கும் மேற்பட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஃபயர்பவர் லிஸ்டை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படியலில் மொத்தம் 145 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த 60 காரணங்களையும் வைத்துக் கணக்கிட்டே பவர்இண்டெக்ஸ் ஸ்கோரை நிர்ணயம் செய்கிறார்கள்.
இது குறித்து குளோபல் ஃபயர்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தனித்துவமான முறையை வைத்து நாங்கள் இதைக் கணக்கிடுகிறோம். இதன் மூலம் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் என அனைத்தையும் எங்களால் ஒப்பிட்ட பார்க்க முடிகிறது. ஆண்டுதோறும் இந்தப் பட்டியலை வெளியிடும் நிலையில், இந்தாண்டிற்கான பட்டியலை இப்போது வெளியிடுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பலவீனமான நாடுகள் லிஸ்டில் பூட்டான் முதலிடத்தில் உள்ள நிலையில், மால்டோவா, சுரினாம், நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சோமாலியா, பெனின் லைபீரியா, பெலிஸ் நாடுகள் 4 முதல் 7 வரையிலான இடங்களில் உள்ளன. சியரா லியோன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஐஸ்லாந்து நாடுகள் பலவீனமான இராணுவம் லிஸ்டில் இருக்கிறது.
பொதுவாக ஒரு நாட்டின் இராணுவ பலத்தைப் புரிந்துகொள்வது ஒரு சிக்கலான விஷயமாகும். உபகரண வளங்களுக்கு அப்பால், இராணுவ வெற்றிகளுக்கு போர் அனுபவம், மனஉறுதி போன்ற விடயங்களும் முக்கியம். அதை புள்ளிவிபரங்களினால் கணக்கிட முடியாது.




