கிளிநொச்சி பளைப் பகுதியில் 16 வயதிற்கும் குறைவான சிறுமி ஓருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவருக்கு 8 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
கிளிநொச்சி பளைப் பகுதியில கடந்த 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் தனது உறவு முறையான 16 வயதிற்கும் குறைவான சிறுமி ஓருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டது.
இன்று (18) குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ.சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்றைய தினம் பகல் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரி சார்பாக சட்டத்தரணி பி. அருச்சுனாவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான அரச சட்டவாதி என் என். அர்ஜுனகுமாரும் முன்னிலையாகினர்.
குறித்த எதிரியானவர் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் தனது மனைவியின் பாதுகாப்புக்காக சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் குறித்த சிறுமியை தனது வீட்டில் வைத்திருந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார்.
வட மாகாணத்திலே பதினாறு வயதிற்கு குறைவான சிறுவர்கள் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வாறு மேல் நீதிமன்றம் வரைக்கும் கொண்டுவரப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தார்.
மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட மன்று எதிரிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.