தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது திருகோணமலைக்கு வடகிழக்கே 10.5 வடக்கு அட்சரேகை மற்றும் 84.1 கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் சுமார் 380 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது நாளைய தினம் (03) மேலும் சூறாவளியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு நோக்கி இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி 4ஆம் தேதி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை 5ஆம் தேதிக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.