இளம் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்கும் போது கைது செய்யப்பட்ட கல்முனை பொலிஸ் நிலைய வழக்கு முகாமைத்துவ பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (22) காலை 7 மணியளவில் கல்முனையில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் லஞ்சம் கோரப்பட்ட அம்பாறை, எரகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரே குறித்த 58 வயதான பொறுப்பதிகாரியை ஹோட்டல் அறைக்கு அழைத்துள்ளார். குறித்த பெண் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் முன்கூட்டியே அறிவித்துள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் சந்தேகநபர் அறைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போதே கைது செய்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சில நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவோம் என்று வேறொரு பெண்ணின் கணவரை அச்சுறுத்தி பணம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் அவரது தாயின் சகோதரியின் மகளுக்கு சொந்தமானது. கப்பம் கட்டாததால், நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த பெண்ணை கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒப்படைத்துள்ளது.
குறித்த பெண் கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாரத்திற்கு ஒருமுறை கல்முனை பொலிஸில் ஆஜராகி புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
வாரத்திற்கு ஒரு முறை பொலிஸாரிடம் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மாதம் ஒரு முறை என மாற்றி, வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் எனவும் அந்த அதிகாரி இந்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கேட்டதாக இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிவாரணம் வழங்குவதற்காக, வழக்குக்கு முன் அவருக்கு பாலியல் உதவி வழங்க வேண்டும் என்று வழக்கு முகாமைத்துவ பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்குள் விடுதிக்கு வருமாறு பொறுப்பதிகாரி கூறியிருந்தார். இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தரை அறைக்குள் வைத்து கைது செய்தனர்.
இந்த சந்தேகநபர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




