தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் மாத சம்பளமாக கிட்டத்தட்ட ரூ. 40 மில்லியன் (119,200அமெரிக்க டொலர் ) பெறும் தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டி தொடரின்போது எழுந்த சர்ச்சைகளையடுத்து, தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்த பல்வேறு தகவல்கள் மற்றும் பிற முறைகேடுகள் சமீபத்திய காலங்களில் பதிவாகியுள்ளதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட்டின் மாதச் சம்பளம் 30,000 அமெரிக்க டொலர்களாகும், இது இலங்கையின் ரூ. 9.8 மில்லியன்.
பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தனவின் மாதாந்த சம்பளம் 20,000 அமெரிக்க டொலர்கள், இது இலங்கை ரூபா 6.5 மில்லியன். உதவிப் பயிற்றுவிப்பாளர் நவீத் நவாஸின் மாதச் சம்பளம் 14,000 அமெரிக்க டொலர்கள், இது இலங்கை ரூபா 4.5 மில்லியன்.
பந்துவீச்சு பயிற்சியாளர் அன்டன் ரூக்ஸ் மற்றும் பிசியோதெரபிஸ்ட் கிறிஸ் கிளார்க்கின் சம்பளம் தலா 8,000 அமெரிக்க டொலர்கள், இது இலங்கையின் ரூ. 2.6 மில்லியன். மேலும் திஹான் சந்திரமோகன் என்ற பிசியோதெரபிஸ்ட் ஒருவர் ரூ. 2.9 மில்லியன் பெறுகிறார்.
பணிக்குழுவின் தலைவராக அல்லது உயர் செயல்திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராகப் பணிபுரியும் அவுஸ்திரேலியரான Timothy McCaskill இன் மாதச் சம்பளம் ரூ. 5 மில்லியன். Noel McCarthy மற்றும் Grant Loudon ஆகிய இரு வெளிநாட்டு மேலாளர்களது மாத சம்பளம் ரூ. 2.1 மில்லியன்.