ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று கைது செய்தனர்.
நந்தியாலா பகுதியில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபுவை கைது செய்ய சென்றனர்.
ஆனால், அங்குகூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காத்திருந்த போலீசார், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர்.
எப்ஐஆர் பதிவு செய்யப்படாமல் தன்னை கைது செய்ய முடியாது என சந்திரபாபு நாயுடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
“எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஏதோ நடந்ததாக வழக்கு போடப்பட்டது. உங்களுக்கும் எனக்கும் அரசியலமைப்பே அடிப்படை. ஆதாரம் இல்லாமல் எப்படி கைது செய்வது. திறன் மோசடியில் எனது பெயர் எங்குள்ளது என்பதைக் காட்டு. ஆதாரம் இல்லாமல் எப்படி கைது செய்வது. ஆதாரம் இருந்தால் தூக்கிலிடுங்கள். விசாரணை அதிகாரி இல்லாமல் கண்காணிப்பாளர் ஏன் வருகிறார்? என்னை மிரட்டுகிறாயா?’’ என சிஐடி அதிகாரிகளிடம் சந்திரபாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விஜயவாடா செல்லும் முன் ரிமாண்ட் அறிக்கையை வழங்குவோம். முன்கூட்டியே ரிமாண்ட் செய்ய முடியாது. ரிமாண்ட் ரிப்போர்ட்டிலேயே அனைத்தும் இருப்பதாக ஆந்திர சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுக்கு முன், வழக்கு விவரங்களை கூற வேண்டும் என, சந்திரபாபு வக்கீல்கள் வற்புறுத்திய போது, ’சந்திரபாபுவுக்கும் பங்கு இருப்பதாக, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்’ என, சி.ஐ.டி., போலீசார் பதிலளித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார்.



