நேற்று (7) மாலை அம்பலாந்தோட்டையில் இருந்து கொக்கல்ல நோக்கி பயணித்த பஸ்ஸை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி, பஸ்ஸுக்குள் இருந்த பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியைச் சேர்ந்த லசந்த ரோஹினி என்ற 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டையில் இருந்து கொக்கல்ல நோக்கி பயணிகளுடன் பேரூந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அம்பலாந்தோட்டை மடயமலலந்த பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு பின்பக்க வாசலால் பேருந்தில் ஏறி உள்ளே அமர்ந்திருந்த பெண்ணை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பெண் வலது தோள்பட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பாரகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுடப்பட்ட பெண் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அம்பலாந்தோட்டை தெற்கு கட்வார பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் தாயாவார். குறித்த பெண் நீதிமன்ற விசாரணைகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது குறித்த பெண்ணின் 17 வயது மகளும் பெண்ணின் சகோதரியும் பேருந்தில் இருந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் கண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஜூலை 18ஆம் திகதி கொல்லப்பட்ட நபரின் மருமகனும் சந்தேக நபர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை சில மணித்தியாலங்களில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமரகோன் கங்கணம்கே சிறிபால (62) என்பவராவார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்த நபரைக் கொல்ல வரவில்லை, அவரது மருமகனைக் கொல்ல வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.




