பளை இராணுவ முகாமிலிருந்து இரகசியமாக துப்பாக்கியை எடுத்துச் சென்ற இராணுவச்சிப்பாய், மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதலனுடன் வாழும் தனது மனைவியுடனான குடும்பத் தகராறின் எதிரொலியாக, அவர் இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
குருநாகல் பகுதியை சேர்ந்த 26 வயதான இராணுவச்சிப்பாயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பளையிலுள்ள கவசப்படை பிரிவை சேர்ந்த இராணுவச்சிப்பாய் இன்று (4) விடுமுறையில் வீடு சென்றுள்ளார். எனினும், அவரது கடமை துப்பாக்கியை அவர் ஒப்படைக்கவில்லை. இது குறித்து ஆய்வு செய்த இராணுவத்தினர், சிப்பாய் துப்பாக்கியுடன் வெளியேறியிருக்கலாம் என சந்தேகித்தனர்.
உடனடியாக பளை புகையிரத நிலையத்திற்கு சென்ற போதும், சிப்பாய் அங்கிருக்கவில்லை.
இதேவேளை, பளையில் இருந்து புகையிரதத்தில் ஏறினால் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால், கொடிகாமத்திற்கு சென்று புகையிரதத்தில் ஏறியுள்ளார் சிப்பாய்.
பளை இராணுவத்தினர் கொடிகாமத்துக்கு நேடி வந்தபோது, கொடிகாமத்திலிருந்து புகையிரதம் புறப்பட்டிருந்தது. இதையடுத்து, பளை புகையிரத நிலையத்திலிருந்து சிவில் உடையில் இராணுவ அணியொன்று புகையிரதத்தில் ஏறியது.
அவர்கள் புகையிரதத்தில் தேடுதல் நடத்தினார்கள். கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்தபோது, இராணுவச்சிப்பாயை அவர்கள் அடையாளம் கண்டனர்.
இதையடுத்து, இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு, மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து, சிப்பாய் புகையிரதத்திலிருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ரி56 ரக துப்பாக்கி அவரது பயணப்பையிலிருந்து மீட்கப்பட்டது. 4 மகசீன்களும் மீட்கப்பட்டன.
மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து, இராணுவப்பொலிசார் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறின் எதிரொலியாக துப்பாக்கியை கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
இராணுவச்சிப்பாயின் மனைவி, தற்போது அவரை விட்டு பிரிந்து சென்று, கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வருகிறார். கள்ளக்காதலன் தன்னை தொடர்ந்து, மிரட்டி வருவதாகவும், இதனால் பழிவாங்குவதற்காக துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக சிப்பாய் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சிப்பாய் பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேலதிக விசாரணைகள் நடந்து வருகிறது.