யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியொருவருக்கு, சத்திரசிகிச்சையின் மூலம் மணிக்கட்டுடன் கையொன்று அகற்றப்பட்டுள்ளது.
நேற்று இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊசி மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட kanila வினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்தார்.
“கனிலா செலுத்திய போது அல்லது மருந்து செலுத்தும் போது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கையின் கீழ் பகுதிக்கு இரத்தம் செல்ல முடியாமல், கை செயலிழந்துள்ளது. இதனால் கையை அகற்ற வேண்டியேற்பட்டுள்ளது. அது தொடர்பான பூரண விசாரணை நடந்து கொண்டிருக்கிறது“ என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.