தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை இரண்டு வாரங்களில் கையளிக்கவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (3) மாலை இடம்பெற்றது.
அங்கு பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நுவரெலியா பொது வைத்தியசாலையின் ஜே.எம்.ஓ டொக்டர் சமிந்த குணதிலக்க, உயிரிழந்த பெண்ணின் உடல் பாகங்கள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டியிருப்பதால் இரண்டு வாரங்களின் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவார் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனையின் போது இடது கை மணிக்கட்டில் மதுஷங்க என்று பச்சை குத்தியிருப்பது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த பெண்ணை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். மேலும் உயிரிழந்தவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தமக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு லிந்துலை பொலிஸார் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரின் கீழ் பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள லிந்துலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




