கொழும்பு-கண்டி நெடுஞ்சாலையில் பட்டாலிய கஜுபுர என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்த இருபத்தி இரண்டு வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
22 வயதுடைய விதானகே திமுத்து ரசாஞ்சலி என்ற தனியார் நிறுவனம் ஒன்றின் காசாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் உடுவாக நீர்வீழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது பழம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
யுவதி மோட்டார் சைக்கிளின் ஆசனத்தில் அமர்ந்திருந்த போது, அவரது காதலன் பழம் வாங்க சென்றதாகவும், அப்போது கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்துபிட்டியால வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், பஸ் மோதியதில் பழ விற்பனை நிலையம் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழை பெய்து கொண்டிருந்த போது பஸ் சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




