ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிரொய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.
“அவரும் ரணிலைப் போன்றவர்.இன்னும் எதையும் கற்கவில்லை.மக்கள் கோபப்படுவது நியாயமானது.அவர் கற்றுக்கொள்வதில்லை. அவர் முன்கூட்டியே வளர்ந்த பிரொய்லர் கோழி,” என்று அவர் கூறினார்.
நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த உறவுமுறையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றார்.
‘இன்று நாம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த நாட்டில் வாழ்கின்றோம். பசில் ராஜபக்ஷ, பி.பி.ஜயசுந்தர மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தான் இந்த பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்தவர்கள். இப்படியே போனால், இந்த நாட்டின் பொருளாதாரம் பயங்கரமான வீழ்ச்சிக்குள் தள்ளப்படும் என்று முன்கூட்டியே எச்சரித்தோம். ஆனால் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் அமைச்சர் பதவிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டோம்
இந்தப் பொருளாதார நெருக்கடி இறுதியாக அரசியல் புயலை உருவாக்கியுள்ளது. அந்த அரசியல் புயலால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓட வேண்டியதாயிற்று. மொனராகலையில் உள்ள ஷசீந்திர ராஜபக்ஷ தனது முகம் முழுவதும் தாடியை வளர்க்க வேண்டியிருந்தது.
ராஜபக்ஷகள் இறுதியாக அவர்கள் உயிரைக் காப்பாற்ற ஒரு மீட்பு அதிகாரியைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் ரணில் விக்கிரமசிங்க. பந்துல குணவர்தன அன்று பிணைமுறி திருடன் என்று பேப்பர்களை விநியோகித்தவர், இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அமைச்சர். மகிந்த ராஜபக்ச அப்போது ‘பிணைமுறி திருடன் ரணில்’ என்றார்.இப்போது இருவரும் அதே அரசாங்கத்திற்குள். ஆக நாம் அனைவரும் பார்க்கிறோம், இது வரலாற்றில் இதுவரை உருவான குண்டர் கூட்டணி அரசு. இந்தக் கூட்டணி அரசிடம் கொள்கை ஒப்பந்தம் இல்லை, ஒருவரையொருவர் காப்பாற்றும் ஒப்பந்தம் உள்ளது. ” என்றார்.