வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் மயானத்தை சுற்றி மதில் கட்டும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், நாகர்கோயில் மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்படடது.
பிரதேச செயலாளர், பிரதேசசபை, நாகர்கோயில் கிழக்கு, மேற்கு மக்கள் ஒன்றுகூடி, நிரந்தர தீர்மானம் எடுப்பதாக இணங்கியதன் அடிப்படையில் இந்த பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் பொலிசாரால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கையெடுப்பதாகவும் பருத்தித்துறை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோயில் பகுதியில் மயானமொன்றை சுற்றி மதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (14) நடைபெறவிருந்தது.
புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் இதற்காக முன்முயற்சி எடுத்திருந்தார். பல வருடங்களின் முன்னர் ஒரு தரப்பினர் பரம்பரையாக அந்த மயானத்தை பயன்படுத்தியிருந்தனர். நாகர்கோயில் பாடசாலை மீதான விமானத்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்களும் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
பின்னர் யுத்த சூழலில் மயானம் பாவனையற்று போனது. அதன் பின்னர், மயானத்திற்கு அருகிலிருந்த பகுதிகளில் புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தமது பாரம்பரிய மயானத்தை புனரமைக்க வேண்டுமென ஒரு தரப்பினர் தற்போது நடவடிக்கை மேற்கொண்டனர். மறுதரப்பினர், தமது குடியிருப்புக்கு அண்மையில் மயானம் வேண்டாமென்றனர்.
கிட்டத்தட்ட இது ஒரு சமூக முரணாகவும் வலுவடைந்தது.
மதில் கட்டுவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வந்த புலம்பெயர் வாசியொருவர், கடந்த 13ஆம் திகதி மயானப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பொலிசாரிடம் முறையிட்டிருந்தார்.
மயானப்பகுதியை அளவீடு செய்ய சென்ற சமயத்தில், மயான எதிர்ப்பாளர்களுடன் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது, அந்த நபர் காயமடைந்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகவும் சென்றார்.
இதையடுத்து 13ஆம் திகதி மாலையில் பருத்தித்துறை பொலிசார் அந்த பகுதிக்கு விசாரணைக்கு சென்ற போது குழப்பம் ஏற்பட்டது.
மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கும், பொலிசாருக்குமிடையில் தர்க்கம் உருவாகி, அது விரிவடைந்தது. இளைஞர்கள், பெண்கள் என பேதமின்றி பொலிசார் தடியடி நடத்தினர். இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.
அப்போது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. தாம் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லையென பொலிசார் மறுத்தனர். எனினும், அந்த பகுதியில் வெற்றுக்கோதுகள், ரவைகள் காணப்பட்டன.
இந்த சர்ச்சைகளையடுத்தே, பருத்தித்துறை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான கலந்துரையாடல் நடந்து, மயானத்திற்கு மதில் கட்டும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.