கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அலவத்துகொட, பல்லேகம, அலேகடே பிரதேசத்தில் வசிக்கும் தனுகா மதுவந்தி ஜயதிலக என்ற 25 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
மனைவி வீட்டில் இல்லை என கணவன் அவரது தாயாருக்கு அறிவித்ததன் அடிப்படையில் தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண், கணவருடன் சேர்ந்து கடை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம், இரவு 9.50 மணியளவில் கணவர் இறுதி சடங்கிகொன்றில் கலந்து கொள்வதாக கூறி கடையை பூட்டி விட்டு சென்றதாக கூறியுள்ளார்.
நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியை காணவில்லையென போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்..
அவர்கள் வசித்த வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து இரவு 9.30 மணியளவில் அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் குடும்பத் தகராறு இருந்ததாகவும் பிரதேசவாசிகள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11ஆம் திகதி காலையிலிருந்து பிரதேசவாசிகள் பெண்ணை தேடிய நிலையில், வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள வயல்வெளியிலுள்ள சதுப்பான பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது கொலையா என பொலிசார் சந்தேகம் வெளியிட்டதுடன், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.