முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் முன்பாக இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவு சாலைக்கு சொந்தமான பேருந்துகள் நிறுத்தப்பட்டு, போராட்டமொன்று இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு இ.போ.ச சாலையினால் நடத்தப்படும் கிழக்கு மாகாண பேருந்து சேவையை குழப்பும் விதமாக தனியார்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவையை நிறுத்துமாறு கோரியே இந்த போராட்டம் நடந்து வருகிறது.
முல்லைத்தீவு சாலையிலிருந்து மட்டக்களப்பிற்கான பேருந்து சேவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்து மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரத்தை குறிவைத்து, அம்பாறையிலிருந்து முல்லைத்தீவுக்கு தனியார் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து புறப்பட்டு வரும் தனியார் பேருந்து, மட்டக்களப்பிலிருந்து புறப்படும் இ.போ.ச பேருந்திற்கு முன்பாக பயணிக்கும். இதனால் இ.போ.சவின் வருமானத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
தூர சேவைகள் இவ்வாறு அண்மித்த நேரத்தில் இடம்பெற முடியாது.
இதை சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு சாலை இ.போ.ச ஊழியர்கள், அம்பாறை தனியார் பேருந்தின் சேவையை நிறுத்துமாறு முல்லைத்தீவு பொலிசாரிடம் கோரியிருந்தனர்.
எனினும், முல்லைத்தீவு பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை.
இதையடுத்து, தமக்கு உடனடி தீர்வு தர வேண்டுமென வலியுறுத்தி, முல்லைத்தீவு சாலையின் பேருந்துகளை, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




