குளியாப்பிட்டிய மேலதிக நீதவான் சம்பத் ஆரியசேனவை வீட்டில் அடைத்து வைத்து, அவரது உத்தியோகபூர்வ காரை கொள்ளையிட்ட நபரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். திருடப்பட்ட காரையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
சந்தேகநபர், பின்னவல வீதி, பிலியந்தலை மடபாதவில் அமைந்துள்ள மேலதிக நீதவானின் வீட்டை வாடகைக்கு பெறும் போர்வையில் வந்துள்ளார். வீடு வாடகைக்கு விடப்படவுள்ளதாக நீதவான் இணைய வழியாக வெளியிட்ட அறிவித்தலை பார்வையிட்ட பின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வீட்டை பார்வையிட இளைஞன் வந்திருந்தார்.
சந்தேகநபர் சுமார் 25 வயதுடையவர். கைது செய்யப்படும் போது, வத்தளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகை வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தார்.
சந்தேக நபர் கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் தந்தை அரச வங்கியொன்றில் பணிபுரிந்தவர் எனவும், அவரது சகோதரர் ஐரோப்பிய நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையும் தாயும் பிரிந்து வாழ்ந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் வத்தளையில் வாடகை வீட்டில் தங்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றில் சில ஏற்கனவே பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளுடன் தொடர்புடையவை எனவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைத்தொலைபேசி பதிவுகள் மற்றும் சிசிடிவி கமெரா காட்சிகள் இரண்டையும் ஆராய்ந்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக மேலதிக மாவட்ட நீதவானின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தி காரை ஒப்படைக்க 5 இலட்சம் ரூபா கப்பம் கேட்டுள்ளார்.
“நீங்கள் நீதிபதி என்பதை இன்றைய பேப்பர்களில் இருந்து தெரிந்து கொண்டேன், அதுவரை எனக்குத் தெரியாது. ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஐந்து இலட்சம் ரூபா தந்தால் காரை தருகிறேன்“ என கூறியுள்ளார்.
சந்தேகநபர் தெரிவித்த இந்தக் கருத்துக்கு மேலதிக மாவட்ட நீதிபதி பதிலளிக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.




