காலம் தாழ்த்தாது தமிழர் மக்களுக்கு உரிய வழங்குவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நல்லை ஆதீன சுவாமிகள் இந்திய மீன்வள இணை அமைச்சரிடம் தெரிவித்ததாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசின் மீன்வள இணை அமைச்சர் இன்றைய தினம் நல்லை ஆதீனத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வர் மற்றும் இந்து மாமன்றத்தின் உப தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின்போது நல்லையாதீன முதல்வர் மேற்படி கோரிக்கை விடுத்ததாக கலாநிதி ஆறு திருமுருகன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினை திருக்கேதீஸ்வரர் ஆலயத்தினை புனரமைத்தது போல அதனை பாதுகாத்து புனமைப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
அதேபோல் நல்லை ஆதீன சுவாமிகள் அவர்கள் தமிழரின் பிரச்சனை தொடர்பில் காலம் தாழ்த்தாது தீர்வு வழங்குவதற்கு இந்திய அரசு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
அதேபோல இந்திய நிதி பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினை யாழ்ப்பாண தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அதனை மத்திய அரசிடம் கையளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும்என கோரியதோடு கிழக்கு மாகாணத்திலும் இந்திய துணை தூதரகம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கு மக்கள் சேவையினை பெற்றுக்கொள்ள இலகுவாக அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.