கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை மாணவி ஒருவரை இளைஞன் வழிமறித்து அசிட் குடிக்குமாறு பலவந்தப்படுத்தியதில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உடன் இருந்த சிறுமியின் தந்தை மற்றும் சந்தேக நபருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுமி, அவரது தந்தை மற்றும் இளைஞன் ஆகியோர் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி தனது தந்தையின் முச்சக்கர வண்டியில் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அவரது காதலன் அவர்களை வழிமறித்து சிறுமியின் கழுத்தைப் பிடித்து அசிட்டை பருக்கியுள்ளார்.
21 வயதுடைய பெண் கேகாலை உடுமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அந்த இளைஞன் கேகாலை நகரை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகள் அந்த இளைஞனை காதலித்து வந்ததாகவும், அதற்கு இரு தரப்பினரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் யுவதியை தொடர்ந்து படிக்க வேண்டாம் என்று காதலன் பலமுறை எச்சரித்ததாகவும் யுவதியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அவரது தேவையற்ற தலையீட்டை பொறுத்துக்கொள்ள முடியாத மகள் அவருடனான உறவை கைவிட முடிவு செய்ததாக அவர் கூறினார்.
கேகாலை தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் நாலக மகேதரகம தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.