நுவரெலியா – நானுஓயா ஊடாக தலவாக்கலை பகுதியை நோக்கிச் செல்லும் இரதல்ல பிரதான குறுக்கு வீதியில் பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும், வான் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளானதிர் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் குறைந்தது 60 பேர் காயமடைந்துள்ளதுடன், 53 பேர் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து சம்பவத்தில் வானில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர்.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தப்பட்டிருந்த வான் மீது மோதியது. வான் முச்சக்கர வண்டியை மோதியது. விபத்தை தொடர்ந்து பேருந்து 40 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் 11ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த பேருந்தில் பயணித்துள்ளனர். 44 மாணவர்கள் பேருந்தில் பயணித்தனர். அவர்களில் 41 பேர் காயமடைந்தனர்.
விபத்திற்குள்ளான வான், ஹட்டன், குடாகம பகுதியை சேர்ந்த குடும்பத்தினுடையது.
நானுஓயா மற்றும் ஹட்டன் பிரதேசங்களைச் சேர்ந்த 8 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள், 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.