இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இத்துடன் அவருக்கு எதிரான கடைசி வழக்குகளை முடித்து வைத்தது.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், சூ கி, மியான்மரின் தலைவராக இருந்தபோது ஹெலிகாகொப்டரை குத்தகைக்கு எடுத்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பான குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
மியான்மரில் பெப்ரவரி 2021 இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து, இராணுவ ஆட்சி அமலானது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூ கி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
மியான்மரில் ஜனநாயகத்துக்கான பல தசாப்த காலமாக போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூ கி, தனது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை இராணுவ அரசாங்கங்களின் கீழ் சிறையில் கழித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அவருக்கு பல்வேறு வழக்குகளில் 26 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது. மேலும் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மியான்மரின் 49 ஆண்டு கால இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒரு தசாப்த கால தற்காலிக ஜனநாயக ஆட்சி நிலவிய சமயத்தில், 2015 முதல் ஐந்து ஆண்டுகள் மியான்மரை சூ கி வழிநடத்தினார். சூ கியின் அரசாங்கத்தை இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்குவதைத் தடுக்க கடந்த ஆண்டு தொடக்கத்தில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
அவர் ஏற்கனவே கடந்த 13 மாதங்களில் பலவிதமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார், இவை அனைத்தும் அபத்தமானது என்று அவர் விவரித்தார்.
கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறுதல், ரேடியோ கருவிகளை சட்டவிரோதமாக வைத்திருப்பது, அரச இரகசிய சட்டத்தை மீறுதல் மற்றும் நாட்டின் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்தல் ஆகியவை குற்றங்களில் அடங்கும்.




