இலங்கையில் இருந்து மேலும் மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை இன்று சனிக்கிழமை (5) காலை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்றடைந்தனர்.
இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (4) இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அனுஷ்யா அவரது மூன்று மாத குழந்தை,மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார்,அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் மற்றும் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (4) இரவு மன்னாரில் இருந்து ஒரு படகில் புறப்பட்டு இன்று சனிக்கிழமை (5) அதிகாலை 1 மணியளவில் அடுத்த நடுதிட்டு பகுதியில் வந்திறங்கினர்.
பின்னர் தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



