சுனாமியென நினைத்து தேவாலயத்தில் தஞ்சமடைந்த மக்கள்; முழுவதும் மூடிய மண்சரிவு: அடிக்கடி சுனாமி தாக்கும் பிலிப்பைன்ஸ் கிராம மக்களின் சோக முடிவு!

Date:

பிலிப்பைன்ஸை தாக்கிய நால்கே புயல், அதை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை, இயற்கை அனர்த்தங்களில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் நால்கே புயல் வியாழக்கிழமை தாக்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கு கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. கனமழைக்கு பிலிப்பைன்ஸின் தென் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியதில் வீடுகள் பல சேதமடைந்தன. ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸ் நிலப்பகுதியை கடந்த புயல் தென்சீனக்கடலிற்குள் புகுந்தது.

புயலைத் தொடர்ந்து கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டன.

கனமழையால் பேங்சமோரோ தன்னாட்சிப் பகுதியில் உள்ள மகுயிண்டனாவோ மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. இது, முன்னாள் பிரிவினைவாத கெரில்லாக்களால் சமாதான உடன்படிக்கையின் கீழ் முஸ்லீம் தன்னாட்சி பிராந்தியமாக செயற்படுகிறது.

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழைக்கு இதுவரை 98 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

நிலச்சரிவால் மூடப்பட்ட பகுதிகள் கனரக இயந்திரங்களால் தோண்டப்பட்டு வருகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணமான மகுயிண்டனாவோவில் உள்ள குசியோங் கிராமத்தில், டெடுரே இன சிறுபான்மையினர் குடியிருக்கிறார்கள். அடிக்கடி இந்த பகுதியை சுனாமி தாக்குவதால், சுனாமியை எதிர்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் பேரழிவு தயார்நிலை பயிற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், கனமழை காரணமாக, மினந்தர் மலையில் இருந்து பாரிய மண்சரிவு ஏற்படுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்கு தயாராகவும் இருக்கவில்லை. இம்முறை அந்த மலையிலிருந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத மழையால் கட்டவிழ்த்து விடப்பட்ட மண் சரிவுக்கு அவர்கள் தயாராக இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஓகஸ்ட் 1976 இல், மோரோ வளைகுடாவில் நள்ளிரவில் தாக்கிய 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது பிலிப்பைன் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்று. இதனால், கடலோர மாகாணங்கள் பெரும்பாலும் அழித்தன.

மோரோ வளைகுடாவிற்கும் 1,464-அடி உயரமான மினந்தர் மலைக்குமிடையில் அமைந்துள்ள குசியோங் 1976 பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சோகத்தை கிராமம் மறக்கவில்லை. வயதான கிராமவாசிகள் தங்கள் குழந்தைகளுக்கு சுனாமி மற்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய பயங்கரமான கதையை கூறி, அவர்களை தயாராக இருக்கும்படி எச்சரிப்பது அங்கு பல தசாப்த கால பாரம்பரியமாக உருவாகி வருகிறது.

“ஒவ்வொரு ஆண்டும், சுனாமியை எதிர்கொள்ள அவர்கள் பயிற்சிகளை நடத்துகிறார்கள். எச்சரிக்கை மணியை அடிக்க ஒருவர் நியமிக்கப்பட்டார். மக்கள் பாதுகாப்பு தேடி ஓட வேண்டிய உயரமான மைதானங்களை அவர்கள் தெரிவு செய்திருந்தனர்” என்று என்று பிராந்திய உள்துறை அமைச்சர் சினரிம்போ சனிக்கிழமையன்று தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.

“ஆனால் மலைப்பகுதியில் உள்ள புவி-அபாயங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

“ஏதோ ஒரு பெரிய சத்தத்தை கேட்டு சுனாமி எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது.  அது சுனாமி என நினைத்துக் கொண்டு மக்கள் தேவாலயத்திற்கு ஓடினார்கள். ஆனால் அது மண்சரிவு. தேவாலயத்தை முற்றாக மூடியது“ என்றார்.

சனிக்கிழமையன்று குசியாங்கிற்கு இராணுவம், காவல்துறை மற்றும் பிற மாகாணங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களுடன் புல்டோசர்கள், பேக்ஹோக்கள் மற்றும் பேலோடர்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் சேறு காரணமாக மூடப்பட்ட இடத்தை இன்னும் தோண்ட முடியவில்லை. அங்கு தேவாலயம் இருந்ததற்கான தடயமே இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

நால்கே புயல் மற்றும் கனமழை, வெள்ளம் காரணமாக பிலிப்பைன்ஸில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 912,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுளள்னர். 4,100 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 16,260 ஹெக்டேர் (40,180 ஏக்கர்) நெல் மற்றும் பிற பயிர்கள் வெள்ளநீரால் சேதமடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் காணாமல் போனவர்கள் என வெளியிடப்படும் புள்ளி விபரங்களில்,  குசியோங்கைத் தாக்கிய பெரும் மண்சரிவில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் பல முழு குடும்பங்களும் அங்கு புதையுண்ருக்கலாமென அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை வழங்க எந்த உறுப்பினரும் எஞ்சவில்லையென சினரிம்போ கூறினார்

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்